
என்னவென்று ஆரம்பிப்பது. 4 மாதத்திற்கு முன் என் மனைவியின் நண்பியின் திருமணத்தில் பார்த்த நண்பர் (மணப்பெண்ணின் பெரியப்பா மகன்). நன்றாக பேசினார். அவர்தான் எங்களுக்கு அறை மற்றும் வசதிகள் செய்து கொடுத்தார். எங்கள் குழந்தைக்கு பால் வேண்டுமா? என்று உரிமையுடன் கேட்டு திருமண மண்டபத்தின் அடுக்களையில் சென்று கொடுத்து விட்டு சென்றார். நான் என் மனைவியிடம் சொல்லிக் கொண்டிருந்தேன், வெகு நாட்கள் பழகியவர் போல உரிமையுடன் செய்கிறார் பாரேன் என்று கூட சொல்லிக் கொண்டிருந்தேன்.
அந்த நண்பியிடம் இருந்து 3 நாட்களுக்கு முன்னர் ஒரு தொலைபேசி அழைப்பு. அமைதியாக ஆரம்பித்து, அந்த நபரின் பெயரை சொல்லி, அவர் தற்கொலை செய்து கொண்டார் என்றும் வீட்டில் எல்லோரும் ஒரே கவலையாக உள்ளனர் என்றும் தெரிவித்தார்.
என் மனைவி நான் அலுவலகம் முடிந்து வந்த பின்னர், என்னிடம் சொல்லி விட்டு விழியோரமாய் கண்ணீர் துளியை தன் சோகத்திற்கு துணைக்கு அழைத்திருந்தார். எனக்கு முதலில் அப்படியா, ஏன் என்ன ஆச்சு? நல்லாதான இருந்தார் நாம பார்க்கிறப்போ? என்று கேள்விகள் கேட்டு விட்டு, மேலும் என் மனைவியின் துயரத்தை அதிகரிக்காமல் உறங்க சென்று விட்டேன். " சரி சரி அதையே நினைக்காமல் ஒழுங்கா தூங்குப்பா" என்று சொல்லி விட்டு யோசிக்க ஆரம்பித்தேன்.
இதுவரை ஒரு 6 முறை இருக்குமா? இது போன்ற நிகழ்வுகளை என் வாழ்வில் கேட்டிருப்பேன். முதன் முதலில் கேட்டது நான் 6ஆவது படிக்கும்பொழுது இருக்கும். அந்த வயதில், எரிந்து போன அந்த உடலை, இப்படியெல்லாம் இப்பொழுது சொல்லுகிறேன். உரைந்து நின்று, தாயிடம் பிதற்றியது, அம்மா அந்த அண்ணன் ஏன்மா அப்படி பண்ணிக்கிட்டான் என்றதுதான். அனைவரின் அழுகைக் குரலுக்கும் நடுவில், எரிந்த அவனை மீண்டும் எரிக்க எடுத்து சென்றார்கள். கொடுமையிலும் கொடுமை என்னவென்றால், அந்த பையனை, அந்த பையனின் ஒவ்வொரு அசைவையும் கூட இருந்து ரசித்த (இந்த காலத்து குழந்தைகளுக்கு கிடைக்காத ஒரு வரம்) அவனின் 80 வயது பாட்டி, அழுததுதான். என்ன சொல்றது, ஒரு நிமிட தாமதம் அந்த மூளை சரியான கட்டளை இட, அதற்குள் அனைத்தும் முடிந்து விடுகிறது. இது தற்கொலை செய்து கொள்பவர்களுக்கு.
அனைத்துமே மறுபடி புதிதாகவும் புரியாமலும் நடக்க ஆரம்பிக்கிறது அந்த நபரின் தற்கொலைக்கு பிறகு அவனது அல்லது அவளது உறவுகளுக்கு, அவனது அல்லது அவளது நண்பர்களுக்கு!!! யெப்பா உங்களுக்கு எல்லாம், ஒரு 5 நிமிட வேதனையோ வலிக்கோ பிறகு, இயக்கம் நின்று விடுகிறது. உங்களுக்கான இலக்கை அடைந்து போய் சேர்ந்து விடுகிறீர்கள். ஆனால் உங்களையே நினைத்து வாழும், உயிர் இருந்தும் பிணமாய் வாழும் உங்கள் சொந்தங்களையோ, நண்பர்களையோ ஒரு நிமிடம் நினைத்துப் பார்த்திருப்பீர்களா? எது நடந்தா எனக்கு என்ன என்று நினைத்து போய் விடுகிறீர்கள்.
பேச்சு வழக்குல சொல்லுவதுண்டு, "தற்கொலை செய்துக்கறதுக்கு ஒரு தையிரியம் வேணும்பா". டேய் டேய் அதெல்லாம், சும்மா சொல்லி வைக்கறதுதாண்டா... எவ்வளவோ விடயங்களை நண்பர்களிடமோ அல்லது மனதுக்கு பிடித்தவரிடமோ, மனம் விட்டு பேசுகிறோம். அது போல, ஒரு இக்கட்டான சூழல் வரும் பொருட்டு, யாரிடமாவது பேசி பார்க்கலாம் இல்லையா?
அதெல்லாம் விட்டுட்டு, மலையிலேந்து குதிக்கறது, மயி** புடுங்கறது, இதெல்லாம் எதுக்கு? யெப்பா நீங்க ஒரு எலும்பு கூட இல்லாம, போய்ட்டீங்க.... இப்போ யோசிச்சி பாத்தா, உங்களது சிறு பிரயத்தில் இருந்து கூடவே இருந்து ஒவ்வொரு அசைவையும் ரசித்த உங்கள் பெற்றொருக்கு, உயிருடன் கொல்லி வைக்கும் கட்டாயம் இது போன்ற விடயங்கள். இதெல்லாம், இப்படி செஞ்சுக்கிட்டாங்களே என்று, ஏக்க போராடத்துக்குள் என்னை தள்ளியவர்களை ஏசி எழுதுகிறேன். இதெல்லாம் அவங்களுக்கு கேக்காதுன்னு எனக்கும் நல்லாவே தெரியுது. இருந்தாலும் அவய்ங்க மேல உள்ள மாறாத கோபம் என்னை இப்படியெல்லாம் எழுத வைக்குது.
உங்கள மாதிரியான ஆட்களால் தான், இடத்துகெல்லாம், சூயிசைட் பாயின்டுன்னு பேர் வைக்கறானுங்க. நீங்க விட்டுட்டு போகிற சொத்து என்ன தெரியுமா? வெறுமையும், வேதனையும்தான். உங்களுக்கெல்லாம் கேக்காதுங்கறது தெரிஞ்சிருந்தாலும், இந்த ஆவி, ஆன்மா அப்படி என்று வினவுகின்ற விடயங்கள் உண்மையாய் இருக்கக் கூடாதான்னு தோணுது. அப்படி இருந்தா உங்களல்லாம் பாத்து நாலு வார்த்த நறுக்குன்னு கேக்கணும்.
இது இருக்கும் எல்லோருக்காகவும்:
மனம் விட்டு பேசுங்க. அப்படியெல்லாம் எண்ணம் ஏதாவது இருந்தா தயவு செய்து விட்டுடுங்க. உங்கள சுத்தி பாருங்க. கொஞ்சம் கொடைச்சலான உலகம்தான். ஆனா இத விட்டுடு வேற எங்க போவீங்க? "சுய மரணம்னு ஏன் இதுக்கு பெயர் வைக்கவில்லை?, ஒருவன்/ஒருவள் தன்னையும் மாய்த்து கொண்டு, உயிரோடு இருக்கும் அனைவரையும் கொன்று போட்டுட்டு போறானே/போறாளே அதனாலதான்". பயந்து செத்து போறது கோழைத் தனமாதான் எனக்கு தெரியுது:-(
- காவிரிக்கரையோன் MJV
பி.கு: இந்த இடுகையை யூத்புல் விகடன் குட் ப்ளாக்ஸ் பகுதியில் வெளியிட்டு இன்னும் பல பேருக்கு கொண்டு சென்றதற்கு மிக்க நன்றி...